செய்திகள்
விராட் கோலி ரோகித் சர்மா

ரோகித் சர்மாவுடன் மோதல்: பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விராட் கோலி பதில் அளிப்பாரா?

Published On 2019-07-29 09:29 GMT   |   Update On 2019-07-29 09:29 GMT
ரோகித் சர்மா உடன் மோதல் என்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ள நிலையில், விராட் கோலி இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 , 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் இரண்டு 20 ஓவர் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்ஸ் பகுதியில் நடக்கிறது. அந்நாட்டில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த இந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. வருகிற 3 மற்றும் 4-ந்தேதிகளில் அங்கு போட்டிகள் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மற்ற ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீஸில் நடக்கிறது.

இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இன்று இரவு மும்பையில் அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.

பொதுவாக ஒவ்வொரு தொடருக்கு செல்வதற்கு முன்பு கேப்டன் பத்திரிகையாளர்களை சந்திப்பது வழக்கம். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு விராட் கோலி நிருபர்களை சந்திக்கமாட்டார் என்று முதலில் தகவல் வெளியானது.

அவருக்கும், துணை கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த கேள்வியை தவிர்ப்பதற்காக அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கமாட்டார் என்று கூறப்பட்டது.



இதற்கிடையே விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பு பத்திரிகையாளர்களை சந்திப்பார் என்று கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக வெளியான தகவல்களையும் கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது.

விராட் கோலி இன்று மாலை 6 மணிக்கு மும்பையில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.

இந்த சந்திப்பின்போது ரோகித் சர்மாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பலாம். இதற்கு அவர் பதில் அளிப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News