செய்திகள்
இலங்கை வீரர் பெர்னாண்டோ

2-வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை தோற்கடித்து தொடரை வென்றது இலங்கை

Published On 2019-07-28 16:34 GMT   |   Update On 2019-07-28 16:34 GMT
கொழும்பில் நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை தொடரை கைப்பற்றியது.
இலங்கை - வங்காளதேசம் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் கொழும்பில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது போட்டியும் கொழும்பில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான முஷ்பிகுர் ரஹிமைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் 117 ரன்னுக்கள் வங்காளதேசம் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

7-வது விக்கெட்டுக்கு ரஹிம் உடன் மெஹிதி ஹசன் மிராஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. ஹசன் 43 ரன்னில் ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் ரஹிம் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 98 ரன்கள் அடிக்க இலங்கை 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 238 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் அவிஷ்கா பெர்னாண்டோ 75 பந்தில் 82 ரன்கள் விளாசி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

குசால் பெரேரா 30 ரன்னிலும், கருணாரத்னே 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த குசால் மெண்டிஸ் (41), மேத்யூஸ் (52) சிறப்பாக விளையாடி  44.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
Tags:    

Similar News