செய்திகள்
ஜோஸ் பட்லர்

நியூசிலாந்து தோல்விக்கு தகுதியான அணி அல்ல: ஜோஸ் பட்லர்

Published On 2019-07-16 08:18 GMT   |   Update On 2019-07-16 09:20 GMT
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் போராடி வீழ்ந்த நியூசிலாந்து, தோல்விக்கு தகுதியான அணி அல்ல என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடந்த 12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய இங்கிலாந்து 50 ஓவரில் 241 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனதால் போட்டி ‘டை’ ஆனது.

இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 15 ரன் எடுத்தது. 16 ரன் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய நியூசிலாந்தும் 15 ரன் எடுத்தது. இதனால் சூப்பர் ஓவரும் ‘டை’யில் முடிந்தது.

இதையடுத்து இரு அணிகளும் அடித்த புவண்டரி (சிக்சர் உள்பட) கணக்கிடப்பட்டது. இதில் இங்கிலாந்து 26 பவுண்டரிகளும், நியூசிலாந்து 17 பவுண்டரிகளும் அடித்து இருந்தன. நியூசிலாந்தை விட இங்கிலாந்து அதிக பவுண்டரிகள் அடித்து இருந்ததால் கோப்பையை கைப்பற்றியது.

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன் தேவைப்பட்டது. இதில் 4-வது பந்தில் பென் ஸ்டோக்ஸ் 2-வது ரன்னுக்கு ஓடினார். அப்போது மார்ட்டின் குப்தில் எறிந்த பந்து பென் ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. இதையடுத்து நடுவர் இங்கிலாந்துக்கு 6 ரன் வழங்கினார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவர் 5 ரன் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும் என்று முன்னாள் நடுவர், வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இதே போல் பவுண்டரிகளை கணக்கிட்டு இங்கிலாந் துக்கு கோப்பையை வழங்கியதையும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து உள்ளனர். ஐசிசி விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணியை இங்கிலாந்து வீரர் ஜோஸ்பட்லர் பாராட்டி உள்ளார்.



இறுதிப் போட்டியில் விளையாடிய இரு அணிகளும் தோல்விக்கு தகுதியான அணி அல்ல. அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்துக்கு பாராட்டுக்கள். அவர்கள் தோல்விக்கு தகுதியானவர்கள் அல்ல. இந்த தோல்வியை அவர்கள் ஏற்றுக் கொண்டது மிகவும் கடினமானது.

கிரிக்கெட்டில் மறக்க முடியாத போட்டியாக இது அமைந்தது என்று கூற விரும்புகிறேன். இது போன்று நடக்கும் என்று நம்பவில்லை. 50 ஓவர் முடிவில் ஆட்டம் ‘டை’ ஆனபோது ஒருவித விரக்தி ஏற்பட்டது. அதன்பின் பவுண்டரி எண்ணிக்கையில் முன்னிலையில் இருந்ததால் அந்த உணர்ச்சிகள் அனைத்தும் கடந்து சென்று விட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News