செய்திகள்
ஏபி டி வில்லியர்ஸ்

நான் பலிகடா ஆக்கப்பட்டேன்: டி வில்லியர்ஸ் வேதனை

Published On 2019-07-12 14:40 GMT   |   Update On 2019-07-12 14:40 GMT
உலகக்கோப்பைக்கான அணியில் சேர்க்கும்படி எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்று ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் ஏபி டி வில்லியர்ஸ். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை வரை விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா கைப்பற்றிய பிறகு திடீரென கடந்த ஆண்டு மே மாதம் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

அப்போது நீங்கள் ஓய்வு பெறக்கூடாது. உலகக்கோப்பை வரை அணியில் நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் டி வில்லியர்ஸ் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா 9 ஆட்டங்களில் மூன்றில் மட்டுமே வெற்றி  பெற்று லீக் சுற்றோடு வெளியேறியது. இந்தியாவுக்கு எதிரான 3-வது போட்டியில் தோல்வியடைந்ததும் அந்த அணியின் உலகக்கோப்பை கனவு பறிபோனது.

இந்தியாவிடம் தோற்ற அதே நேரத்தில் டி வில்லியர்ஸ் மீண்டும் அணிக்கு திரும்ப விரும்பினார். அதற்கான காலஅவகாசம் இல்லை என்று தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அவரது வேண்டுகோளை நிராகரித்துவிட்டது என்ற செய்தி பரவியது.

கிரிக்கெட் உலகில் ஜென்டில்மேன் என பெயரெடுத்த டி வில்லியர்ஸ்க்கு இந்த செய்தி கரும்புள்ளியாக அமைந்தது. அவருக்கு எதிராக கடும் விமர்சனம் கிளம்பியது.

விமர்சனம் குறித்து எந்த பதிலும் கூறாமல் இருந்த டி வில்லியர்ஸ் இன்று விளக்கக் கடிதத்துடன் பதில் அளித்ததுள்ளார்.

இதுகுறித்து டி வில்லியர்ஸ் குறிப்பிடுகையில் ‘‘நானும் டு பிளிசிஸும் பள்ளியில் இணைந்து படித்து வந்த காலத்தில் இருந்தே நண்பர்களாக இருக்கிறோம். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன் அவரைத் தொடர்பு கொண்டு நான் பேசினேன்.

ஐபிஎல் தொடரில் நான் ஓரளவிற்கு சிறப்பாக விளையாடினேன். நான் ஓய்வு பெறும்போது அணியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தற்போது அதுபோன்று கோரிக்கை இருந்தால் நான் விளையாடுகிறேன். ஆனால், கோரிக்கை இருந்தால் மட்டுமே என்றேன்.



உண்மையிலேயே நான் கட்டாயப்படுத்த வில்லை. உலகக்கோப்பை தொடருக்கு முன் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்று முயற்சி செய்தது இல்லை. அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்ததும் கிடையாது. என்னுடைய பக்கத்தில் இருந்து குற்றம்சாட்ட ஏதுமில்லை. அநீதி என்று சொல்வதற்கு ஏதுமில்லை.

இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தபோது மீடியாக்களில் எங்களுடைய தனிப்பட்ட ரகசிய பேச்சு வெளியானது. அது என்னை மோசமானதாக சித்தரிக்க வைத்துவிட்டது. அந்த கதை என்னால் கசியப்படவில்லை. அதேபோல் என்னுடைய உதவியாளர்கள் மற்றும் டு பிளிசிஸ் ஆகியோரால் கசிய வில்லை. யாரோ ஒருவர் விமர்சனத்தை திசைப்திருப்ப விரும்பியிருக்கலாம். அது யாரென்று எனக்குத் தெரியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News