சிறப்புக் கட்டுரைகள்
null

அழகான இளமைக்கு ஏக அர்த்த ஹாலாசனம்- 139

Published On 2022-06-29 10:04 GMT   |   Update On 2022-06-29 10:06 GMT
  • மூன்றும் சரியாக ஒருவர் உடலில் இயங்கினால் அவருடைய தோல் மிக மிருதுவாகவும், பளபளப்பாகவும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும்படியும் அமையும்.
  • நம் மனதில் அமைதி நிலவுவதற்கு முதலில் மூன்று முக்கிய ஓட்டங்கள் சரியாக இயங்க நமக்கு வழிமுறை தெரிய வேண்டும்.

பொதுவாக எல்லா மனிதர்களும் என்றும் இளமையோடு இருக்க வேண்டும் என்று தான் விரும்புகின்றனர். என்னதான் மேக்கப் போட்டாலும் உடலில் உள்ள உள் உறுப்புக்கள் ஒழுங்காக இயங்கவில்லையெனில் மனதில் கவலைகளும், குழப்பங்களும் இருந்தால் அது முகத்தில் காட்டிவிடும்.

யார் எப்பொழுதும் மனதில் கவலை, டென்ஷன் இல்லாமல் மகிழ்ச்சியாக உள்ளார்களோ அவர்களது உடலில் உள்ள தசைகள் தான் பஞ்சபூதத்திலுள்ள பிரபஞ்ச சக்தியை சரியான முறையில் உள்வாங்கி கொள்ளும். அப்பொழுதுதான் நமது உடலில் ஆரோக்கியம் சரியாக இருக்கும். உடலில் உள்ள நமது தசைகள் சுருக்கமில்லாமல் இருக்க வேண்டுமெனில் மனதில் அமைதி நிலவ வேண்டும். நம் மனதில் அமைதி நிலவுவதற்கு முதலில் மூன்று முக்கிய ஓட்டங்கள் சரியாக இயங்க நமக்கு வழிமுறை தெரிய வேண்டும்.

இந்த மூன்றும் சரியாக ஒருவர் உடலில் இயங்கினால் அவருடைய தோல் மிக மிருதுவாகவும், பளபளப்பாகவும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும்படியும் அமையும். இதுதான் உண்மையான இளமை. மனதில் தேவையற்ற எண்ணங்கள் இருந்தால், மன அழுத்தம் இருந்தால் வெப்ப ஓட்டம் பாதிக்கப்படும். அதனால் மூச்சோட்டமும் பாதிக்கப்படும். இதனால் தோல் சுருக்கும் ஏற்படும். உடல் உள் உறுப்புக்கள் சரியாக இயங்காது.


ள் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் நன்றாக இயங்க வேண்டும். மேலும் தோல் முழுவதும் நன்கு மிருதுவாக பளபளப்பாக இருக்க வேண்டும். மனம் அமைதியாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் ஏக அர்த்த ஹாலாசனத்தை காலை - மாலை இரண்டு வேளையும் 5 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள். உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும். உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், கணையம் சிறப்பாக இயங்கும். நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சரியாக உடலில் சுரக்கும். மன அமைதி கிடைக்கும். உடல் முழுவதும் ஆரோக்கியமாக இயங்கும். உடலும், மனமும் ஆரோக்கியமாய் உள்ளதால் உண்மையான இளமை, உண்மையான முக வசியம், கவர்ச்சி உற்சாகம் இருக்கும்.

ஏக அர்த்த ஹாலாசனம் செய்முறை

• விரிப்பில் நேராக படுக்கவும்.

• இரு கைகளையும் பக்கவாட்டில் வைக்கவும்.

• கைகளை அமுக்கி வலது காலை மட்டும் மூச்சை இழுத்து கொண்டே நேராக உயர்த்தவும். (படத்தை பார்க்கவும்)

• பத்து வினாடிகள் இருந்துவிட்டு மூச்சை வெளிவிட்டுக்கொண்டு காலை மெதுவாக தரையில் வைக்கவும்.

• இதேபோல் காலை மாற்றி இடது காலை மட்டும் நேராக உயர்த்தி பத்து வினாடிகள் பயிற்சி செய்யவும்.

• ஒவ்வொரு காலிலும் இரண்டு முறைகள் பயிற்சி செய்யவும்.

பலன்கள்

• வயிறு, மார்பு, கழுத்து, தொடைகள் சரியான தசை கட்டுப்பாட்டுடன் இருக்கும். அதனால் உடல் மிக அழகான தோற்றத்துடன் இருக்கும்.

• சிறுநீரகம், கணையம் , சிறுகுடல், பெருங்குடல் சுத்தமாக இயங்கும். கழிவுகள் தங்காது

• இதயம் பலப்படும்

• இடுப்புவலி நீங்கும்

• அடி முதுகு வலி நீங்கும்

• கால் பாதம் வீக்கம் நீங்கும்

• மூட்டுக்கள் பலம் பெரும்

• தோல் சுருக்கம் நீங்கும்

• அதிக உடல் எடை குறையும்

• உடல் அசதி நீங்கும்

இந்த ஆசனத்துடன் என்றும் இளமையுடன் வாழ உகந்த உணவுமுறைகள்:

இஞ்சி, சுக்கு, கரிசாலை, வல்லாரை, தூதுவளை இவற்றை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். இவை உடலில் உள்ள அசுத்தத்தை நீக்கி விடும். உடலில் கழிவுகள் தங்காது. இந்த மூலிகைகள் உடலில் இரும்புச்சத்தை சரியான விகிதத்தில் நிலைத்திருக்க செய்யும்

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேருங்கள், நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும்.

அருகம்புல் சாறு வாரம் ஒரு முறை உண்ணவும். அருகம்புல் சாறுடன் ஒரு இளநீர் தண்ணீரை மட்டும் சேர்த்து அதில் தேனும் ஒரு கரண்டி கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.அத்தி பழம் உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரவு சாப்பாடு 7.30-8 மணிக்குள் முடித்துவிடுங்கள். இரவு மட்டும் அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும். இவ்வாறு அமைத்துக் கொள்ளுங்கள்.

என்றும் இளமையோடு வளமாக, நலமாக வாழ்வதற்கு எல்லா ஆசனமும் செய்ய முடியாவிட்டாலும் ஏக அர்த்த ஹாலாசனத்தை தினம் காலை- மாலை 5 நிமிடம் மூன்று முறைகள் செய்யுங்கள். மேற்குறிப்பிட்ட உணவுகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். வளமாக, நலமாக, என்றும் இளமையுடன் வாழலாம்.

வாசகர் கேள்வி: வயிற்றில் கட்டிகள், குடல் புற்றுநோய் வராமல் தடுக்க யோகா முத்திரை உண்டா ?

பதில்: இன்று நம் நாட்டில் வயிற்றில் கட்டிகள், குடல் புண், குடலில் புற்றுக்கட்டிகள் என்பது ஆண்களுக்கும்,பெண்களுக்கும் அதிகமாக வருகின்றது. இதற்குரிய காரணங்களை நாம் முதலில் தெரிந்து கொள்வோம். பின்பு இதற்குரிய யோகப்பயிற்சிகளையும் காண்போம்.

மனித உடலில் ஜீரண மண்டலம் மிக முக்கியமானது. நாம் உண்ணும் உணவு அதன் தரம், தன்மையை பொறுத்துதான் ஜீரண மண்டலம் சிறப்பாக இயங்கி, சத்து, அசத்தை பிரிக்கும். அதற்கு நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல் சரியாக இயங்க வேண்டும். ஒரு மனிதனுடைய உடலில் காலை - மாலை இருவேளையும் கழிவுகள் (மலம்) சரியாக வெளியேற வேண்டும். நாம் உண்ணும் உணவின் சத்து ரத்தத்துடன் சேர வேண்டும். அசத்து தனியாக வெளியேற வேண்டும். அதற்கு நாம் எடுக்கும் உணவு சாத்வீகமாக இருக்க வேண்டும்.

மைதாவினால் ஆன உணவுகள்,அசைவம் போன்ற உணவுகளை அடிக்கடி உட்கொண்டால் ஜீரண மண்டலம் பாதிக்கும். குடலில் புண்கள் ஏற்படும், குடலில் கழிவுகள் தங்கி அது கட்டிகளாக மாறும். பசிக்கும் பொழுது சாப்பிட வேண்டும். பசியறிந்து சாப்பிடவேண்டும். பசிக்கும் பொழுது சாப்பிடாததும், பசியில்லாத பொழுது சாப்பிடுவதும் ஜீரண மண்டலத்தை பாதிக்கும்.

முடிந்த அளவு பழவகைகள், காய்கறிகள் உணவில் அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள், பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிடுங்கள்.

பொதுவாக நிறைய நபர்கள் எனக்கு அதிககாரமாக சமைத்தால்தான் பிடிக்கும் என்பார்கள். தொடர்ந்து அதிக காரமான உணவினை உண்பதால் நாளாக நாளாக சிறுகுடல், பெருங்குடல் இயக்கம் பாதிக்கும். புண்கள் வரும். பின்பு கழிவுகள் சரியாக வெளியேறாமல் ஜீரண மண்டலம் பாதிக்கப்படும். கட்டிகளாக வயிற்றில் குடல் பகுதி வால்வு பகுதியில் உருவாகும். அதனால் பசி இருக்காது. அடிக்கடி வயிற்று வலி ஏற்படும். சாப்பிட்டவுடன் வயிறு வலிக்கும். இதற்கெல்லாம் காரணம் அதிக காரம் சாப்பிடுவது. அதிக உப்பு, அதிக புளிப்பு உணவில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தூக்கம்

ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்குறிய ஓய்வு வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்கு இரவு தூக்கம் மிக முக்கியமாகும்.

இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நிதானம்

இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்கள் மத்தியில் நிதானமாக செயல்படும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. காலை முதல் இரவு படுக்கும் வரை ஒரு பதட்டமான மன நிலையில் வேகமாக ஓடுகின்றனர். நிதானம், பொறுமை இழந்து விடுகின்றனர். இதனால் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை. இதன் காரணமாகவும் ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. குடல் இயக்கம் பாதிப்பு அடைகின்றது. எனவே நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ வேண்டும். அதற்கு யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட பண்புகளை சரி செய்துவிட்டு மாதங்கி முத்திரையும், சூரிய முத்திரையும் காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.


சூரிய முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலை மடக்கி அதன் மையத்தில் கட்டை விரலை வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

மாதங்கி முத்திரை

விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இரு கைவிரல்களை கோர்த்து நடுவிரல் மட்டும் படத்தில் உள்ளது போல் நேராக சேர்த்து வைக்கவும். கையை வயிற்றுக்கு நேராக சேர்த்து வைக்கவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.

மாதுளம் பழம், கொய்யா பழம் ,உணவில் அடிக்கடி எடுக்கவும். வேப்ப இலை கொழுந்து 15 நாட்களுக்கு ஒரு முறை காலை வெறும் வயிற்றில் ஒரு பிடி சாப்பிடவும். வல்லாரை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மணத்தக்காளி கீரை உணவில் எடுக்கவும்.

பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)

63699 40440

pathanjaliyogam@gmail.com

Tags:    

Similar News