ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜிக்கு பிரதமர் மோடி, அமித்ஷா புகழஞ்சலி
- 1950-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகினார்.
- துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்.
ஜனசங்க நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார். அப்போது அவர், இந்தியாவின் வளர்ச்சிக்கு, குறிப்பாக வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக பரவலாக மதிக்கப்படுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.
1901-ல் கொல்கத்தாவில் பிறந்த முகர்ஜி, இந்து உரிமைகள் மற்றும் தேசியவாதக் கருத்துக்களுக்குப் பெயர் பெற்றவர். மேலும், 1950-ல் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சியின்போது அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமைச்சரவையில் இருந்து விலகினார்.
மேலும் அவர் இந்து மகாசபையின் தலைவராக இருந்தார். பின்னர் ஆர்எஸ்எஸ் உதவியுடன் பாஜகவுக்கு முன்னோடியான ஜனசங்கத்தை நிறுவினார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் ஜெயந்திக்கு அஞ்சலி. இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை போன்ற துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக அவர் பரவலாக மதிக்கப்படுகிறார். அவர் தனது அறிவார்ந்த தன்மை மற்றும் அறிவுசார் திறமைக்காகவும் அறியப்பட்டார்" என்றார்.
தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, சியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்.
பின்னர் வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " ஒவ்வொரு இந்தியனும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பிலிருந்து உத்வேகம் பெற வேண்டும். அவரது பிறந்தநாளில் எனது பணிவான அஞ்சலிகள்" என்று குறிப்பிட்டிருந்தார்.