இந்தியா

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம்- 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

Published On 2022-07-02 05:25 GMT   |   Update On 2022-07-02 05:25 GMT
  • கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.
  • மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஜூன் மாதம் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

தொடக்கத்தில் மிதமாக பெய்த மழை அதன்பின்பு குறைய தொடங்கியது. பின்னர் மாநிலத்தின் மலையோர பகுதிகளில் மட்டும் லேசாக பெய்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேரளாவில் வருகிற 5-ந் தேதி வரை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாளை திருவனந்தபுரம் தவிர மாநிலத்தின் 13 மாவட்டங்களிலும், நாளை மறுநாள் முதல் 5-ந் தேதி வரை அதிதீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத்தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளதால் மாநில பேரிடர் மேலாண்மை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உள்பட 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News