இந்தியா

உத்தவ் தாக்கரேவுக்கு பின்னடைவு... நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி

Published On 2022-06-29 16:14 GMT   |   Update On 2022-06-29 16:14 GMT
  • மகாராஷ்டிர சட்டசபையில் நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவு
  • கவர்னரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்திருந்தது

புதுடெல்லி:

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள், அசாமில் முகாமிட்டுள்ளனர்.

39 சிவசேனா எம்எல்ஏ.க்கள் தற்போதைய கூட்டணி அரசுடன் இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளதால், அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக முன்னாள் முதலமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் கூறினார். அத்துடன், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு கவர்னர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். கவர்னரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி சிவ சேனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். சிவசேனா பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும், மற்ற வழக்குகளுடன் சேர்த்து11ம் தேதி இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News