இந்தியா

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்திக்கு கொரோனா- வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்

Published On 2022-08-10 10:20 GMT   |   Update On 2022-08-10 10:20 GMT
  • பிரியங்கா காந்திக்கு 2-வது முறையாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
  • பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி:

டெல்லியில் பரவி வரும் கொரோனா அதிகரிப்பு காரணமாக அரசியல் தலைவர்களும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானார். இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வு பெற்று வந்தார்.

இந்த நிலையில் அவரது மகளும், காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவருமான பிரியங்கா காந்திக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது நேற்று இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து பிரியங்கா இன்று முதல் தன்னை வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தன்னை சந்தித்து சென்ற காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். பிரியங்கா காந்தி கடந்த ஆண்டு ஜூன் மாதமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தற்போது அவருக்கு 2-வது முறையாக கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் 2 தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மல்லிகார்ஜூன கார்கே டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் மனு சிங்வி மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் பவன் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News