பிரதமர் நரேந்திர மோடி வரும் 7-ம் தேதி வாரணாசி பயணம்
- பிரதமர் மோடியின் சொந்த தொகுதி உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி.
- வரும் 7-ம் தேதி பிரதமர் மோடி அங்கு சென்று ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு வரும் 7-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
வாரணாசி எல்.டி. கல்லூரியில் அட்சய பாத்திரம் மதிய உணவு சமையல் அறையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில் 1 லட்சம் மாணவர்களுக்கு தேவையான மதிய உணவை சமைக்க முடியும்.
இதேபோல், ருத்ராக்சம் பகுதியில் உள்ள சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை மையத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அவர் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் அகில பாரதீய ஷிக்சா சமகம் திட்டத்தினை தொடங்கி வைக்கிறார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதையடுத்து, சிக்ராவில் உள்ள சம்பூர்னானந்த ஸ்டேடியம் செல்லும் பிரதமர் மோடி, ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார் என தெரிவித்துள்ளது.