இந்தியா

இறந்து போன உரிமையாளர் உடலை நாள் முழுக்க காவல் காத்த வளர்ப்பு நாய்

Published On 2022-06-28 05:20 GMT   |   Update On 2022-06-28 05:20 GMT
  • எப்போதாவது ஒருமுறை சோமனை பார்க்க உறவினர்கள் வருவார்கள்.
  • ஒரு நாள் முழுக்க சோமன் உடல் அருகே அவர் வளர்த்து வந்த நாய் காவலுக்கு இருந்தது அந்த பகுதி மக்களை நெகிழ வைத்தது.

திருவனந்தபுரம்:

கேரளாவின் அடிமாலி பகுதியை சேர்ந்தவர் சோமன் (வயது 67). ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு சோமன், அடிமாலியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருடன் அவரது வளர்ப்பு நாயும் இருந்தது.

எப்போதாவது ஒருமுறை அவரை பார்க்க உறவினர்கள் வருவார்கள். அவர்களும் சோமனை பார்த்து பேசிவிட்டு சென்று விடுவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சோமனின் மருமகன், அவருக்கு போன் செய்தார். அவர் போனை எடுத்து பேசவில்லை.

இதனால் அவர் சோமனை பார்க்க அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு சோமன் இறந்து கிடந்தார். அவரது உடல் அருகே சோமன் வளர்த்து வந்த நாய் காவலுக்கு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் சோமன் நேற்று முன்தினமே இறந்திருப்பது தெரியவந்தது. ஒரு நாள் முழுக்க சோமன் உடல் அருகே அவர் வளர்த்து வந்த நாய் காவலுக்கு இருந்தது அந்த பகுதி மக்களை நெகிழ வைத்தது.

Similar News