இந்தியா

தர்மேந்திர பிரதான்

தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத் திட்டம் உருவாக்கப்படும்- மத்திய அரசு

Published On 2022-08-16 16:41 GMT   |   Update On 2022-08-16 16:52 GMT
  • தேசிய பாடத் திட்டம் குறித்து பொது மக்களுக்கும் கருத்து தெரிவிக்கலாம்.
  • 23 மொழிகளில் பொதுமக்கள் கருத்துக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும்.

புதிய இந்தியாவுக்கான பாடத்திட்டத்தை தயாரிப்பதற்கான கருத்துக் கேட்பில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு மத்திய கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு ஏற்ப தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு உருவாக்கப்படும், ஆற்றல்மிக்க மேம்பட்ட இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதில் இது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நமது கலாச்சார ஆனிவேருடன் ஒருங்கிணைக்கவும், உலகளாவிய கண்ணோட்டம், காலனி ஆதிக்க முறையிலிருந்து கல்வித் துறையை விடுவித்து, நமது அடுத்த தலைமுறையினரிடையே ஆழ்ந்த பெருமிதத்தை ஏற்படுத்துவதில் இந்த பாடத்திட்டம் முக்கிய. பங்காற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர், மாணவர்கள், சமுதாய உறுப்பினர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வல்லுநர்கள், மக்கள் பிரதிநிதிகள், கலைஞர்கள், கைவினைஞர்கள், விவசாயிகள் இதில் பங்கேற்கலாம். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதல்வர்கள், பள்ளிக்கூட நிர்வாகிகள், கல்வியாளர்கள், உள்பட பள்ளிக் கல்வி மற்றும் ஆசிரியர் கல்வியில் ஆர்வமுள்ள யாரும், இந்த கருத்துக் கேட்பில் கலந்து கொள்ளலாம்.

கருத்துக் கேட்பில் பங்கேற்க விரும்புவோர் https://ncfsurvey.ncert.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்யலாம். அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் உட்பட மொத்தம் 23 மொழிகளில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News