இந்தியா

ஆளுங்கட்சியின் எதிர்ப்பு அலையை சமாளிக்க மோடியின் புகழை நம்பியுள்ள கர்நாடக பா.ஜனதா

Published On 2023-05-10 08:42 IST   |   Update On 2023-05-10 08:42:00 IST
  • 75 புதிய முகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • தென்இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் அதாவது கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி நடக்கிறது.

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்த்ல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை என்பது அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது. இந்த எதிர்ப்பு அலையை சமாளிக்க ஏற்கனவே 15-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. 75 புதிய முகங்களுக்கு டிக்கெட் வழங்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் பிரதமர் மோடி மாநிலம் முழுவதும் சுமார் 20 மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். பெங்களூருவில் 33 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரமாண்டமான ஊர்வலம் நடத்தினார்.

அது மட்டுமின்றி மைசூரு, கலபுரகி உள்ளிட்ட நகரங்களிலும் அவர் ஊர்வலம் மேற்கொண்டார். பிரதமர் மோடியின் இந்த தீவிரமான பிரசாரத்தால் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களிடையே நிலவும் எதிர்ப்பு மனநிலை குறையும் என்று கர்நாடக பா.ஜனதா நம்புகிறது. அந்த எதிர்ப்பு மனநிலையில் இருந்து வெளியே வந்து, பா.ஜனதா வெற்றி பெற பிரதமர் மோடியின் புகழ் கை கொடுக்கும் என்று அந்த தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்

தென்இந்தியாவில் ஒரே ஒரு மாநிலத்தில் அதாவது கர்நாடகத்தில் மட்டுமே பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. எக்காரணம் கொண்டும் இந்த ஆட்சியை பறிகொடுத்து விடக்கூடாது என்று பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள். நாட்டின் பெரிய, வேகமாக வளர்ந்து வரும் வளமான மாநிலங்களில் ஒன்றான கர்நாடகத்தை தக்கவைத்துக்கொள்ள பா.ஜனதா தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

பிரதமர் மோடி மட்டுமின்றி, உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பல்வேறு மத்திய மந்திரிகள், தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களின் பா.ஜனதா முதல்-மந்திரிகள், பிற மாநிலங்களை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகிகள் கர்நாடகத்தில் தங்கி பிரசாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News