இந்தியா

திருப்பதி லட்டு எடை குறைவாக உள்ளதாக பக்தர்கள் வாக்குவாதம்- அரசியல் கட்சியினர் கண்டனம்

Published On 2022-11-11 05:58 GMT   |   Update On 2022-11-11 05:58 GMT
  • திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன
  • லட்டு வாங்க சென்ற பக்தர் ஒருவர் லட்டின் எடையை சரிபார்த்தபோது 108, 93 கிராம் என்ற அளவில் மட்டுமே இருந்தது.

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 160 கிராம் முதல் 180 கிராம் எடையுள்ள சிறிய வகை லட்டுகள் ரூ.50க்கும், பெரிய வகை லட்டுகள் ரூ.200க்கும், வடை ஒன்று 100-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுகளில் முந்திரி, திராட்சை, கற்கண்டு உள்ளிட்டவைகளை சேர்த்து தயாரிப்பதால் விற்பனை செய்யப்படும் விலையை விட கூடுதல் செலவு ஆகிறது. இருப்பினும் பக்தர்களுக்கு குறைந்த விலையில் லட்டு வழங்கப்பட்டு வருவதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் லட்டு வாங்க சென்ற பக்தர் ஒருவர் லட்டின் எடையை சரிபார்த்த போது 108, 93 கிராம் என்ற அளவில் மட்டுமே இருந்தது. இதனால் லட்டு வாங்க சென்ற பக்தர்களுக்கும் லட்டு கவுண்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனை வீடியோவாக செல்போனில் பதிவு செய்த பக்தர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.

லட்டு கவுண்டர்களில் வைக்கப்பட்டுள்ள எலக்ட்ரானிக் எடை மெஷின்கள் மைனஸ் ஜீரோவில் உள்ளது. இதனால் எடை குறைவாக காண்பிக்கிறது. அங்குள்ள எலக்ட்ரானிக் எடை மெஷின் சரிவர வேலை செய்யவில்லை. ஆனால் நாங்கள் வழங்கப்படும் லட்டு 160 முதல் 180 கிராம் வரை உள்ளது என தெரிவித்தனர்.

இதற்கு தெலுங்கு தேசம் மற்றும் பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று 61,306 பேர் தரிசனம் செய்தனர். 30,133 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.46 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News