இந்தியா

பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி, ஜெய்ராம் ரமேஷ்

பிளாக் மேஜிக் கருத்து... பிரதமர் மோடியை வரிந்து கட்டி தாக்கும் காங்கிரஸ்

Published On 2022-08-10 17:26 GMT   |   Update On 2022-08-10 17:26 GMT
  • வாய்ஜாலம் காட்டுபவர் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார் என ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடினார்
  • பிரதமரின் தலைமையால் தான் மக்களுக்கு பிரச்சனை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம்

புதுடெல்லி:

விலைவாசி உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் கடந்த 5ம் தேதி கருப்புச் சட்டை அணிந்து பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனை கேலி செய்யும் வகையில், பிரதமர் மோடி இன்றைய நிகழ்ச்சியில் பேசினார். ஆகஸ்ட் 5-ம் தேதி சிலர் 'பிளாக் மேஜிக்' செய்ய முயன்றதாக அவர் கூறினார். மேலும், மாந்திரீகம், சூனியம், மூடநம்பிக்கை போன்றவற்றில் ஈடுபட்டு மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற முடியாது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை என மோடி குறிப்பிட்டார்.

பிரதமரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பிரதமர் மோடி கருப்பு உடையில் இருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 'கருப்பு உடைகள் குறித்து அர்த்தமற்ற பிரச்சினையை கிளப்புகிறார்' என பதிவிட்டுள்ளார்.

'கருப்பு பணத்தை கொண்டுவர எதுவும் செய்ய முடியாமல், இப்போது கருப்புத் துணிகளைப் பற்றி அர்த்தமற்ற பிரச்சினையை உருவாக்குகிறார்கள். அவர்களின் பிரச்சனைகளை பற்றி பிரதமர் பேச வேண்டும் என்று நாடு விரும்புகிறது. ஆனால் வாய்ஜாலம் காட்டுபவர் எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்' என ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக சாடி உள்ளார்.

'கருப்பு ஆடைகளால் மக்களுக்கு பிரச்சனை இல்லை, உங்கள் தலைமையால் தான் பிரச்சனை' என்று பிரதமரை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடினார்.

எதிர்க்கட்சிகளுக்கு சாபம் கொடுப்பதற்கு பதில் அவர் பரப்பிய இருளைப் பற்றி பிரதமர் பேச வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பொதுச்செயலளார் ரன்தீப் சுர்ஜேவாலா கூறி உள்ளார். 

Tags:    

Similar News