டிரம்ப் உடனான பிரதமர் மோடியின் நட்புக்கு அர்த்தம் இல்லை: காங்கிரஸ் விமர்சனம்
- இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பை அமெரிக்கா அமல்படுத்தியுள்ளது.
- மேலும், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தத்திற்கு காலக்கெடு நிர்ணயித்தார். காலக்கெடுவுக்குள் இந்தியா- அமெரிக்கா இடையே ஒப்பந்தம் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று 25 சதவீத வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடிக்கு இடையிலான நட்பை காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
டொனால்டு டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளார். அத்துடன் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அபராதம் விதித்துள்ளார். பிரதமர் மோடி, டொனால்டு டிரம்ப் இடையிலான நட்புக்கு அர்த்தம் இல்லை.
அமெரிக்க அதிபர் அவமானம் செய்தபோது, அமைதியாக இருந்தால் சலுகைகள் கிடைக்கும் என பிரதமர் மோடி நினைத்தார். ஆனால் அது நடவக்கவில்லை என்பது தெளிவாகிறது. பிரதமர் மோடி இந்திரா காந்தியிடமிருந்து உத்வேகம் பெற்று அமெரிக்க அதிபரை எதிர்த்து நிற்க வேண்டும்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.