இந்தியா
திருமணம்

மின்தடையால் திருமண விழாவில் மணப்பெண்கள் மாறியதால் பரபரப்பு

Published On 2022-05-10 07:27 GMT   |   Update On 2022-05-10 07:42 GMT
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இந்த மின்தடையால் ஒரே மேடையில் நடந்த சகோதரிகளின் திருமணத்தில் மணப்பெண்கள் மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உஜ்ஜன்:

மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜனி அருகே உள்ள அஸ்லானா கிராமத்தில் கோமல், நிகிதா, கரிஷ்மா ஆகிய 3 அக்காள் தங்கைகளுக்கு ஒரே நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக உறவினர்கள் திருமண மண்டபத்தில் குவிந்தனர். மணமகன்களும் திருமண உடை அணிந்து தயாரானார்கள்.

மணமகள்கள் 3 பேரும் தனித்தனி அறைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டனர். பின்னர் சகோதரிகள் 3 பேரும் முகத்தை முடியவாறு மணமேடைக்கு அழைத்து வரப்பட்டு மணமகன்கள் அருகே அமர வைக்கப்பட்டனர்.

இதில் சகோதரிகள் ஒரே உடைகள் அணிந்து இருந்தனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது. இதனால் திருமண மண்டபம் முழுவதும் போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டாக காணப்பட்டது. அங்கு ஜெனரேட்டர் வசதியும் இல்லாததால் என்ன செய்வது என தெரியாமல் மணமக்களின் உறவினர்கள் தவித்தனர்.

திருமணத்திற்கான நேரமும் நெருங்கியது. மணமக்கள் ஒன்றாக அமர வைக்கப்பட்டு அதற்கான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த சூழ்நிலையில் மின்சாரம் மீண்டும் வந்தது. அப்போது தான் 2 சகோதரிகள் மணமகனுடன் இடம் மாறி இருந்த விவரம் தெரியவந்தது.

இதைபார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சுதாரித்த அவர்கள் பின்னர் மணமக்களை சரியாக நிறுத்தி திருமணத்தை நடத்தி வைத்தனர். இந்த மின்தடையால் ஏற்பட்ட குழப்பம் திருமண மண்டபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News