இந்தியா
கோப்புப் படம்

கொரோனாவால் 47 லட்சம் பேர் பலி - உலக சுகாதார நிறுவன அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அரசு

Published On 2022-05-07 00:48 GMT   |   Update On 2022-05-07 00:48 GMT
இந்தியாவில் இதுவரை 190 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டு உள்ளது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

உலகம் முழுவதிலும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அதில், உலகம் முழுவதும் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அரசுகள் அளித்த தரவுகளோடு ஒப்பிடும்போது, இது இரண்டு மடங்குக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் 47 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், இது இந்திய அரசு அளித்துள்ள தகவலோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு அதிகம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், உலக சுகாதர நிறுவனத்தின் இந்த அறிக்கையை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா, நமது நாட்டில் திட்டமிட்ட ரீதியில் தரவுகளை சேகரிக்கும் முறை அமலில் உள்ளது. எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் மேம்போக்கான பத்திரிகை அறிக்கையை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

கொரோனா மரணங்கள் ஏற்படத் தொடங்கியபோது, அது குறித்த வரையறை நம்மிடம் இருக்கவில்லை. அப்போது உலக சுகாதார நிறுவனத்திடமும் அத்தகைய வரையறை இருக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி குறித்த தரவுகளையும் திட்டமிட்ட ரீதியில் நாம் சேமித்து வருகிறோம். இவ்வாறு 130 கோடி தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளது. நாம் இதுவரை 190 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை போட்டுள்ளோம்.

நம்மிடம் உள்ள தரவுகள் நம்பகத்தன்மை மிக்கவை. எனவே, உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையை பொருட்படுத்த வேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News