இந்தியா
வெங்கையா நாயுடு

குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியை தாய்மொழியில் வழங்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்

Published On 2022-05-01 18:17 GMT   |   Update On 2022-05-02 01:21 GMT
கிராமப் பகுதி மாணவர்கள் உள்பட அனைவருக்கும் சமமான அளவில் உயர்கல்வி கிடைக்க வேண்டும் என்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு ஆற்றிய உரையில் தெரிவித்திருப்பதாவது:

சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, பல்கலைக்கழகங்கள் புதுமையான யோசனைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும். 

ஆராய்ச்சி படிப்பின் நோக்கம் மக்களின் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாக இருக்க வேண்டும்.

மனித மேம்பாடு, வளமான, நிலையான உலகளாவிய எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வி முக்கிய பங்கு வகிப்பதால், கிராமப்புற மாணவர்களுக்கும் உயர்கல்வி கிடைக்கும் வகையில் அதனை சமமான அளவில் கொண்டு செல்வது மிகவும் முக்கியம்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை இந்தியா கொண்டுள்ளது. நமது மனித வளத்தின் கூட்டு ஆற்றலை, தேசத்தை நிர்மாணிக்க பயன்படுத்த வேண்டும். 

தேசிய கல்விக் கொள்கை நாட்டின் கல்வித்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தொலைநோக்கு ஆவணம். 

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இது அமல்படுத்தப்படும் போது, தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது நிரூபணமாகும். குழந்தைகளின் தாய்மொழியில் அடிப்படை கல்வியை வழங்க வேண்டும்.

நிர்வாகம், நீதிமன்றங்கள் ஆகியவற்றில் உள்ளூர் மொழியே தகவல் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு அரசிதழ் அறிவிக்கை மற்றும் அரசாணைகளும் உள்ளூர் அல்லது தாய்மொழியில் இருந்தால்தான் சாதாரண மக்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும்.

கல்வி என்பது வெறும் வேலைவாய்ப்பிற்காக மட்டும் அல்லாமல், அது அறிவை மேம்படுத்துவதற்காவும், ஞானத்தைப் பெருக்குவதற்காகவும் இருக்க வேண்டும். 

வாழ்நாள் முழுவதும் கற்கும் கல்வி, வெறும் பட்டங்களைப் பெறுவதுடன் முடிந்து விடுவதல்ல. மாணவர்கள் பெரிய அளவில் கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும், வாழ்க்கையில் வெற்றி ஈட்டவும் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம்.

உடலைத் தகுதியாக வைத்துக்கொள்ள, சோம்பலான வாழ்க்கை முறையைத் தவிர்த்து, விளையாட்டு மற்றும் யோகாவிற்கு சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

நமது உடல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்றவாறு முன்னோர் கூறியபடி, பாரம்பரிய உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியல் மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தில்லி பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் யோகேஷ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News