இந்தியா
டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆட்சி அமைப்போம்- அரவிந்த் கெஜ்ரிவால்
ஊழல் இல்லாத அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்க முடியும் என்று கெஜ்ரிவால் கூறினார்.
புதுடெல்லி:
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கர்நாடக மாநிலத்தில் இன்று பிரசாரத்தை தொடங்கினார். பெங்களூரு தேசிய கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், டெல்லி, பஞ்சாப் மாநிலங்களைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் ஆட்சி அமைப்போம் என உறுதிபட தெரிவித்தார்.
கர்நாடக பாஜக அரசாங்கத்தின் மீது மாநில ஒப்பந்ததாரர்கள் சங்கம் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை குறிப்பிடும் வகையில், ‘40% அரசாங்கத்தை’ கவிழ்க்க விவசாயிகள் அமைப்புகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டார்.
‘இந்த அரசாங்கங்களின் 20% மற்றும் 40% கமிஷன் கணக்குகளை நாம் மூட வேண்டும். ஊழல் இல்லாத அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்க முடியும், என்றும் கெஜ்ரிவால் கூறினார்.