இந்தியா
உக்ரைனில் இருந்து 2 நாட்களில் 7400 மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு
உக்ரைனின் மேற்கு அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா தனது குடிமக்களை சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றி வருகிறது.
உக்ரைன் மீதான ரஷியா தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆங்காங்கே குண்டு வெடிப்பு, ஏவுகணை உள்ளிட்ட தாக்குதலால் உள் மற்றும் பிற நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர்.
இதனால், லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இதற்கிடையே உக்ரைனின் பல்வேறு நகரங்களிலும் வெளியேற முடியாமல் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்மூலம் உக்ரைனில் இருந்து இதுவரை 6,200 இந்திய மாணவர்களை மீட்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 2 நாட்களில் 7400 பேர் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய விமானங்களான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், இண்டியோ, விஸ்தாரா மற்றும் கோ ஃபர்ஸ்ட் என மொத்தம் 17 விமானங்கள் வரும் வெள்ளிக்கிழமை (நாளை) இயக்கப்படுகிறது.
உக்ரைனின் மேற்கு அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி மற்றும் போலாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா தனது குடிமக்களை சிறப்பு விமானங்கள் மூலம் வெளியேற்றி வருகிறது.
இந்தியர்களை அழைத்துவர விமானங்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கப்படும். 7400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை அடுத்த இரண்டு நாட்களில் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்படுவார்கள். இதில், வெள்ளிக்கிழமை 3500 பேரும், சனிக்கிழமை 3900 பேரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள்.. உத்தர பிரதேசத்தில் 6ம் கட்ட தேர்தல் நிறைவு- 5 மணி வரை 53.31 சதவீத வாக்குப்பதிவு