இந்தியா
கொரோனா வைரஸ்

கொரோனா 3-வது அலை நிலவரம்: மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன?

Published On 2022-01-29 04:29 GMT   |   Update On 2022-01-29 05:27 GMT
ஒமைக்ரான் பாதிப்பு அடுத்த மாதம் 2-வது வாரத்திற்கு பிறகு உச்சத்தை தொட்டு பிறகு வீழ்ச்சி அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர்.
புதுடெல்லி:

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் கடந்த மாதம் மிக வேகமாக பரவத்தொடங்கியது. பல்வேறு மாநிலங்களிலும் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

நேற்று 2.50 லட்சம் பேர் கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த சில தினங்களாக பாதிப்பு குறையத்தொடங்கி இருக்கிறது. ஒமைக்ரான் பாதிப்பு அடுத்த மாதம் 2-வது வாரத்திற்கு பிறகு உச்சத்தை தொட்டு பிறகு வீழ்ச்சி அடையும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி இருந்தனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே கொரோனா பாதிப்பு இந்தியாவில் குறையத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக கொரோனா 3-வது அலையின் தாக்கம் குறைய தொடங்கி விட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை குறைந்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா ஆகிய இரு மாநிலங்களில் மட்டுமே கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது.

கடந்த ஒரு வாரமாக 10 சதவீதம் அளவுக்கு கொரோனா தாக்கம் குறைந்து இருக்கிறது. 16 மாநிலங்களில் சுமார் 20 சதவீதம் அளவுக்கு கொரோனா தாக்கம் குறைந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2.35 லட்சம் என்று தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறையும் பட்சத்தில் 3-வது அலை வீழ்ச்சி உறுதியாகும்.



3-வது அலையின் உச்சம் ஜனவரி 23-ந்தேதியாக இருக்கலாம் என்று மருத்துவ குழுவினர் முதலில் தெரிவித்து இருந்தனர். ஆனால் ஜனவரி 25-ந் தேதி 3-வது அலையின் உச்சம் இருந்ததாக தற்போது மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா 3-வது அலையில் வைரஸ் தாக்கம் மக்கள் மத்தியில் அதிக அளவில் உள்ளது. என்றாலும் உயிரிழப்பு ஏற்படும் வகையில் பாதிப்பு இல்லாததால் மருத்துவமனைகளில் படுக்கைகள் தொடர்ந்து அதிக அளவில் காலியாகவே உள்ளன.

நாடு முழுவதும் சராசரியாக 80 சதவீதம் படுக்கைகள் காலியாக இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

60 வயதிற்கு மேற்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். 75 சதவீதம் முதியவர்கள் 2 தவணை தடுப்பூசியும் முழுமையாக செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News