இந்தியா
கொச்சி அருகே நள்ளிரவில் சரக்கு ரெயில் தடம் புரண்டது- 5 ரெயில்கள் ரத்து
கொச்சி அருகே நள்ளிரவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சிக்கு சிமென்ட் ஏற்றி கொண்டு ஒரு சரக்கு ரெயில் சென்றது.
ஆலுவா ரெயில் நிலையத்திற்கு நேற்று நள்ளிரவு சென்றது. அங்குள்ள 3-வது நடைமேடையில் சென்ற போது ரெயில் திடீரென தடம் புரண்டது.
இது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தடம் புரண்ட சரக்கு ரெயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
சரக்கு ரெயில் தடம் புரண்டதால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எர்ணா குளம்-கண்ணூர் இன்டர்சிட்டி ரெயில், குருவாயூர் - திருவனந்தபுரம் இன்டர்சிட்டி ரெயில், கோட்டயம் - நிலம்பூர், நிலம்பூர் - கோட்டயம் உள்பட 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதுபோல எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து பூனாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை 5.30-க்கு புறப்பட வேண்டும். ஆனால் இந்த ரெயில் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதுபோல புனலூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்புணித்துறாவில் நிறுத்தப்பட்டது. சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் எர்ணாகுளத்தில் நிறுத்தப்பட்டது.
நள்ளிரவில் நடந்த இந்த விபத்து காரணமாக பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.