இந்தியா
நடிகர் திலீப், கேரள உயர் நீதிமன்றம்

மலையாள நடிகர் திலீப் வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க 10 நாள் அவகாசம் - கேரள உயர்நீதிமன்றம் அனுமதி

Published On 2022-01-25 20:47 GMT   |   Update On 2022-01-25 20:47 GMT
சாட்சிகளில் சிலர் மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாக அரசுத் தரப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து கேரள உயர்நீதிமன்றம் மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.
திருவனந்தபுரம்:

நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மலையாள நடிகர் திலீப் தற்போது விசாரணை அதிகாரியை கொலை செய்ய முயற்சித்ததாக இன்னொரு வழக்கில் சிக்கியுள்ளார். அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

திலீப் 3 நாட்கள் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நேற்று 2-வது நாளாக கமலச்சேரி குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் திலீப் நேரில் ஆஜரானார். 

இந்த நிலையில், நடிகை கடத்தல் வழக்கில் தொடர்புடையே முக்கிய குற்றவாளியான பல்சர் சுனியை போலீசார் கைது செய்தனர்.  நடிகை கடத்தல் தொடர்பாக சுனியுடன் திலீப் ஒப்பந்தம் செய்திருந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த வழக்கில் புதிய சாட்சிகளை விசாரிக்க அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சாட்சிகளில் சிலர் மாநிலத்திற்கு வெளியே வசிப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 

இதை ஏற்றுக் கொண்ட கேரள உயர்நீதிமன்றம் புதிய சாட்சிகளை விசாரிக்க அரசு தரப்புக்கு மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள நடிகை கடத்தல் வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News