இந்தியா
அகிலேஷ் யாதவ் ஜின்னாவின் ஆதரவாளர் - பா.ஜ.க. கடும் தாக்கு
மும்பை வெடிகுண்டு தாக்குதல் பயங்கரவாதி கசாப் உயிருடன் இருந்தால் அவரை உத்தரப்பிரதேச தேர்தலில் வேட்பாளராக அகிலேஷ் நிறுத்தியிருப்பார் என்று,பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.
லக்னோ:
சீனாதான் இந்தியாவின் உண்மையான எதிரி என்றும், பாகிஸ்தான் நமது அரசியல் எதிரி என்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு அம்மாநில பா.ஜ.க.கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா லக்னோவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பாகிஸ்தான் ஆதரவானவர். ஜின்னாவின் ஆதரவாளர். அவர் அளித்த ஒரு பேட்டியில், பாகிஸ்தானை உண்மையான எதிரி நாடாக கருதவில்லை என்று கூறியுள்ளார். காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சகோதர, சகோதரிகள் இந்தியர்கள் இல்லையா? அவர் ஆட்சியில் இருந்தபோது பயங்கரவாதிகளை விடுவிக்க முயன்றார்.
தற்போதைய தேர்தலின் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்கள் பெயரை அகிலேஷ் யாதவ் அறிவிக்கவில்லை. ஏனென்றால், நஹித் ஹசன் போன்றவர்களை அவர் நிறுத்தி இருக்கிறார். யாகூப் மேமனை தூக்கில் போட்டிருக்காவிட்டால், அவரையும் வேட்பாளராக நிறுத்தி இருப்பார். கசாப்பையும் நட்சத்திர பேச்சாளராக அறிவித்து இருப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.