தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே விசாகப்பட்டினம்- டெல்லி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீர் புகை
திருமலை:
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து புதுடெல்லிக்கு ஏ.பி.எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்று கொண்டிருந்தது.
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டம் நெக்கொண்டா ரெயில் நிலையம் அருகே சென்ற போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரெயிலில் இருந்து திடீரென புகை கிளம்பியது.
இதனை கவனித்து உஷாரான ரெயில் என்ஜின் டிரைவர் நெக்கொண்டா நிலையத்தில் ரெயிலை நிறுத்தினார்.
உடனடியாக பீதி அடைந்த பயணிகள் அனைவரும் ரெயிலில் இருந்து கீழே இறங்கினர். தீ பரவாமல் தடுக்க தீயணைப்பு கருவிகள் மூலம் புகையை அணைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதனால் ரெயில் நிலையத்தில் இரு வழித்தடங்களிலும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
ரெயில் சக்கரத்தில் பிரேக் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இறுகப் பிடித்துக் கொண்டதால் புகை ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து 3 மணி நேரத்துக்கு பிறகு பிரேக் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஏ.பி.எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. அதற்கு பிறகு அந்த வழியில் மீண்டும் ரெயில் போக்குவரத்து தொடங்கியது.