இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோவில்

சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானம் ரூ.151 கோடி

Published On 2022-01-22 01:38 GMT   |   Update On 2022-01-22 01:38 GMT
சபரிமலை நடப்பு சீசனில் 19.39 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். கோவில் வருமானமாக ரூ.151 கோடி கிடைத்துள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.
திருவனந்தபுரம் :

2021-2022-ம் ஆண்டுக்கான சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த நவம்பர் மாதம் 15-ந் தேதி திறக்கப்பட்டது. 16-ந் தேதி முதல் 41 நாட்கள் வழக்கமான பூஜை வழிபாடுகள் நடந்தது. டிசம்பர் மாதம் 26-ந் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி சார்த்தி மண்டல பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து 4 நாட்கள் இடைவேளைக்கு பின்னர் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை டிசம்பர் மாதம் 30-ந் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மகர விளக்கை முன்னிட்டு 31-ந் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கடந்த 14-ந் தேதி மகர சங்கிராந்தி தினத்தில் ஐயப்பனுக்கு திருவாபரணம் சார்த்தி மகரவிளக்கு பூஜை நடந்தது.

தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கடந்த 20-ந் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவுக்கு வந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சீசன் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், மண்டல விளக்கு நெருங்கிய போது தினசரி 25 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலும், உடனடி முன்பதிவு மூலம் 5 ஆயிரம் பக்தர்கள் வரையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மகரவிளக்கு சீசன் தொடங்கியபோது ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 60 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில், முன்பதிவு செய்யும் அனைவரும் தரிசனம் செய்யலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. இதனால் பக்தர்களின் வருகை அதிகரித்தது.

இந்த நிலையில் சீசனையொட்டி சபரிமலை வருமானம் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நடப்பு சீசனில் 61 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் 23 லட்சத்து 98 ஆயிரத்து 512 பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தனர். அதில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 448 பேர் மட்டுமே சபரிமலை தரிசனத்திற்கு வந்து இருந்தனர். இது 71.60 சதவீதம் ஆகும். அதேபோல் உடனடி முன்பதிவு மூலம் முன்பதிவு செய்த 2 லட்சத்து 2 ஆயிரத்து 437 பேர் தரிசனம் செய்து உள்ளனர். ஆக மொத்தம் நடப்பு சீசனில் 19 லட்சத்து 39 ஆயிரத்து 575 பேர் தரிசனம் செய்து உள்ளனர்.

இதன் மூலம் மொத்தம் ரூ.151 கோடி நடை வருமானம் கிடைத்து உள்ளது. இதில் காணிக்கை வரவாக ரூ.61.5 கோடியும், அரவணை விற்பனை மூலமாக ரூ.54.5 கோடியும், அப்பம் விற்பனை மூலம் ரூ.7 கோடியும் கிடைத்து உள்ளது. மொத்த நடைவருமானத்தில் நெய் அபிஷேகம் உள்ளிட்ட பிற வருவாய்களும் அடங்கும். கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்ட கடந்த சீசனில் மொத்த வருமானம் ரூ.21 கோடி மட்டுமே.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News