இந்தியா
அமர் ஜவான் ஜோதி

அமர் ஜவான் ஜோதி அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்ன அணையா விளக்குடன் இணைப்பு

Published On 2022-01-21 06:19 GMT   |   Update On 2022-01-21 07:03 GMT
1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக அமர் ஜவான் ஜோதி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது.
புது டெல்லி:

1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில் வீரமரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி என நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கு 50 ஆண்டுகளாக தொடர்ந்து எரிந்து வருகிறது.

இதேபோன்று இந்திய சுதந்திரத்திற்கு பின் 1947-48 -ல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற முதல் போரில் இருந்து தற்போதுவரை நடைபெற்ற போர்களில் வீர மரணமடைந்த வீரர்களின் நினைவாக டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய போர் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது. 

இந்த போர் நினைவுச்சின்னத்தில் 1947 முதல் தற்போதுவரை நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இங்கும் அணையா விளக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 



இந்நிலையில், அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு இன்று இடமாற்றம் செய்யப்படுவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவம் கூறியதாவது:-

அமர் ஜவான் ஜோதி நினைவிடத்தில் உள்ள அணையா விளக்கு இந்தியா கேட் பகுதியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் அமைக்கப்பட்டுள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுகிறது. இரண்டு அணையா விளக்குகளும் ஒன்று சேர்க்கப்படுகிறது. 

தேசிய போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு அங்கு அணையா விளக்கு எரிந்துவரும் நிலையில் இந்தியா கேட் பகுதியில் அமர் ஜவான் ஜோதி விளக்கு தனியாக எரிய தேவையில்லை என்பதால் இரு விளக்குகளும் இன்று மாலை ஒன்றாக இணைக்கப்படுகிறது.

இவ்வாறு ராணுவம் தெரிவித்துள்ளது.

குடியரசு தின விழா நெருங்கி வரும் சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
Tags:    

Similar News