உத்தரபிரதேசத்தில் ஓட்டு கேட்க சென்ற பா.ஜனதா எம்.எல்.ஏ.வை விரட்டியடித்த மக்கள்
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடக்கிறது.
அங்கு ஏற்கனவே தேர்தல் பிரசாரம் தொடங்கி நடந்து வருகிறது. பா.ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்தல் பணிகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கட்டவ்லி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. விக்ரம்சிங் சைனி நேற்று முசாபர்பூர் நகரில் தனது சொந்த தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்றிருந்தார்.
அப்போது கிராம மக்கள் எம்.எல்.ஏ. விக்ரம்சிங் சைனிக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். அவர்களி டம் எம்.எல்.ஏ. விக்ரம்சிங் சைனி வாக்கு வாதம் செய்தார்.
ஆனால் பொதுமக்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டார். அவரது காரை பின் தொடர்ந்து சென்று விரட்டியடித்த கிராம மக்கள் தொடர்ந்து அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். இதையடுத்து அவர் அங்கிருந்து சென்று காரில் சென்று விட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒரு வருடமாக போராட்டம் நடத்தினார்கள். விவசாயிகளின் தொடர் போராட்டம் காரணமாக 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்ப பெற்றது.
இந்த விவகாரத்தில் பா.ஜனதா மீது மக்கள் கோபத்தில் இருந்தனர். அதன் காரணமாகவே பா.ஜனதா எம்.எல்.ஏ.வை விரட்டியடித்ததாக கூறப்படுகிறது.
மேலும் எம்.எல்.ஏ. விக்ரம்சிங் சைனி அடிக்கடி பரபரப்பான அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், “இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரானவர்கள் மீது வெடிகுண்டு வீசுவேன்” என்று மிரட்டினார். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பு நமது நாடு இந்துஸ்தான் (இந்துக்களுக்கான தேசம்) என்று அழைக்கப்படுகிறது என்று கூறினார்.
மேலும் பசுக்களை கொல்பவர்களின் கை-கால்களை உடைப்போம் என்றும் அவர் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தார்.