ஆந்திராவில் இரவு நேர ஊரடங்கு- திருப்பதி பக்தர்கள் இரவு 11 மணிக்குள் வந்துவிடவேண்டும்
திருப்பதி:
ஆந்திராவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
அதன்படி திருமணம், காதுகுத்து, பிறந்தநாள் விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ள வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ளது. திரையங்குகளில் 50 பேர் மட்டுமே அனுமதி என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் இரவு 11 மணிக்கு மேல் இயங்க அனுமதி இல்லை.
உணவு பொருட்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், டீக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
வெளியூரில் இருந்து திருப்பதிக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இரவு 11 மணிக்குள்ளாக வந்துவிடவேண்டும்.
தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என திருப்பதி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... சென்னையில் மீண்டும் கட்டுப்பாட்டு பகுதி- கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 387 தெருக்கள் மூடப்பட்டன