இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் ஐ.டி.மையங்களை தொடங்க தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதை வரவேற்பதாகவும் மத்திய மந்திரி கோயல் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.டி.மையங்களை அமைக்கும் தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உதவும் - மந்திரி பியூஷ் கோயல் அறிவிப்பு
பதிவு: ஜனவரி 16, 2022 23:44 IST
மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல்
புதுடெல்லி:
நாட்டின் முன்னணி ஐ.டி. தொழில் நிறுவன தலைவர்களிடையே காணொலி மூலம் மத்திய வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு சேவை ஏற்றுமதியை அதிகரிப்பதில் ஐடி தொழில் துறை முக்கிய பங்காற்ற முடியும்.இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதியை 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு அதிகரிக்கும் வகையில், வளர்ச்சியை ஊக்குவிக்க மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும். இந்த ஆண்டு வர்த்தக ஏற்றுமதி 400 பில்லியன் டாலர் இலக்கை எட்டும் பாதையில் இந்தியா பயணிக்கிறது. சேவை ஏற்றுமதி சுமார் 240 பில்லியன் டாலர் முதல் 250 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும். இது மிகவும் குறைவாக இருந்த போதிலும், வர்த்தக ஏற்றுமதியை எட்டிப் பிடிக்கும் வகையில் வளர்ச்சி அடைய முடியும்.
இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐ.டி. மையங்களை தொடங்க ஐ.டி. தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதை வரவேற்கிறேன். இது ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும்.
ஐ.டி. தொழில் நிறுவனங்கள், ஐ.டி. மையங்களை தொடங்க உள்ள நகரங்களை அடையாளம் காண்பித்தால், மத்திய அரசு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு மத்திய மந்திரி கோயல் குறிப்பிட்டுள்ளார்.