இந்தியா
சமாஜ்வாடி கட்சியில் ஐக்கியமான முன்னாள் மந்திரி- பா.ஜ.க.வுக்கு மேலும் பின்னடைவு
பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைந்தவண்ணம் உள்ளனர்.
லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அதிருப்தி தலைவர்கள் கட்சி தாவும் செயலும் தொடர்ந்து அரங்கேறுகிறது. குறிப்பாக பாஜகவில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைந்தவண்ணம் உள்ளனர்.
பா.ஜ.கவில் இருந்த இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் முக்கிய தலைவர்களும் மாநில மந்திரிகளுமான சுவாமி பிரசாத் மவுரியா, தரம் சிங் சைனி மற்றும் 5 எம்எல்ஏக்கள் வெள்ளிக்கிழமையன்று சமாஜ்வாடி கட்சியில் இணைந்தனர்.
அந்த வரிசையில், சமீபத்தில் மந்திரி பதவியை ராஜினாமா செய்த, தாரா சிங் சவுகான் இன்று தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இருந்து விலகி அகிலேஷ் யாதவ் முன்னிலையில் சமாஜ்வாடி கட்சியில் இணைந்தார். அவர்களை அகிலேஷ் யாதவ் வாழ்த்தி வரவேற்றார். இதேபோல் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளம் (எஸ்) கட்சியின் எம்எல்ஏ வர்மாவும் இன்று சமாஜ்வாடி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.