இந்தியா
உலகிலேயே மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கம் இந்தியாவில்தான் நடைபெறுகிறது- மத்திய மந்திரி
தடுப்பூசி இயக்கம் வெற்றியடைவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘இன்று உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கம் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அனைவரின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த தடுப்பூசி இயக்கம், உலகிலேயே மிகவும் வெற்றிகரமான தடுப்பூசி இயக்கமாக உள்ளது. சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என மன்சுக் மாண்டவியா கூறி உள்ளார்.
இந்தியாவில் இதுவரை 156.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடும் பணியும் (பூஸ்டர்) முழு வீச்சில் நடந்து வருகிறது. 40 லட்சத்திற்கும் அதிகமான தகுதியுள்ளவர்கள் முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்தி உள்ளனர், என்றும் மத்திய மந்திரி கூறி உள்ளார்.