இந்தியா
ஸ்டார்ட்-அப் தொழில் முனைவோர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்
நாட்டின் தேவைக்கு ஸ்டார்ட் அப் தொழில்முனைவோர்கள் எப்படி வெற்றிகரமாக பங்காற்ற முடியும் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் இன்றைய கலந்துரையாடல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லி:
வேளாண்மை, சுகாதாரம், நிறுவன நடைமுறைகள், விண்வெளி, தொழில்துறை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 150 ஸ்டார்ட் அப் தொழில் முனைவோருடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் இந்த கலந்துரையாடல் நடைபெறுகிறது.
வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏ-வை அசைத்தல், உள்ளுரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற மையப்பொருள்கள் அடிப்படையில் 150க்கும் அதிகமான தொழில்முனைவோர் ஆறு பணிக்குழுக்களாக பிரிக்கப்படுவார்கள்.
இந்தக் கலந்துரையாடலில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மையப்பொருள்கள் மீது ஒவ்வொரு குழுவினரும் பிரதமர் முன்னிலையில் விளக்கமளிப்பார்கள். நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளை இயக்குவதன் மூலம் தேசிய தேவைகளுக்கு புதிய தொழில்கள் எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதை புரிந்துகொள்வதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
நாட்டின் வளர்ச்சிக்கு புதிய தொழில்களின் ஆற்றல் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்ய முடியும் என்பதில் பிரதமர் உறுதியான நம்பிக்கை உள்ளவர் என்றும், புதிய தொழில்களின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகப்படுத்துவதற்கான சூழலை அளிப்பதற்கு இணைந்து பணியாற்றி வருவதாக மத்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.