இந்தியா
மத்திய அரசு

லேசான அறிகுறி உள்ளவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் - மத்திய அரசு

Published On 2022-01-13 07:24 GMT   |   Update On 2022-01-13 07:24 GMT
மிதமான அறிகுறி உள்ளவர்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆக்சிஜன் அளவை 93 சதவீதத்துக்கு மேல் வைத்திருந்தால் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள்கடைப் பிடிக்க வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. அதில் வீட்டில் தனிமைப்படுத்துதல் நாட்கள், ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கான வழிமுறைகளை வகுத்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கான கொள்கையை மத்திய அரசு மாற்றி அமைத்து வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா நோயாளிகளை லேசான, மிதமான மற்றும் கடுமையான என வகைப்படுத்தி உள்ளது.

லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு மீண்டும் மீண்டும் சோதனை செய்யாமல், பாதிப்பு இல்லை என்ற முடிவுக்கு பின் 7 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யலாம். லேசான அறிகுறி நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காய்ச்சல் இல்லாமல் இருக்க வேண்டும்.

மிதமான அறிகுறி உள்ளவர்கள் ஆக்சிஜன் உதவி இல்லாமல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆக்சிஜன் அளவை 93 சதவீதத்துக்கு மேல் வைத்திருந்தால் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பல்ராம் பார்கவா கூறியதாவது:-

லேசான அறிகுறி உள்ள நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவதற்கு முன்பு சோதிக்க வேண்டிய அவசியமில்லை. ஏன் என்றால் நோய் தொற்று ஏற்பட்ட 5 நாட்களுக்கு பிறகும் அறிகுறிகள் இல்லாவிட்டால் அவர்கள் நோய் தொற்றை பரப்பமாட்டார்கள் என்று பரிந்துரைக்க போதுமான சான்றுகள் உள்ளன.

ஆர்டி.பி.சி.ஆர். சோதனைகள் மிகவும் உணர்திறன் மிக்கவை. இறந்த வைரஸ்களை கூட தொடர்ந்து கண்டறிந்து பாதிப்பு இருக்கின்றது என்ற தவறான எச்சரிக்கைகளை எழுப்பலாம்.



முதல் நாளில் ஒருவருக்கு எந்த பரிசோதனை செய்தாலும் பாதிப்பு இல்லை என்று முடிவு வரும். ஏனென்றால் வைரஸ் வளர நேரம் எடுக்கும். இது வைரஸ் மறைந்திருக்கும் காலம் என்று அழைக்கப்படுகிறது. வைரஸ் தாக்கிய 3-ம் நாளில் இருந்து 8-வது நாள் வரை சோதனைகள் மூலம் கொரோனா வைரசை கண்டறிய முடியும்.

ஆர்.டி.பி.ஆர். சோதனையில் 20 நாட்கள் வரை தொற்று நோயை கண்டறிய முடியும். இதனால் தான் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் கொள்கை மற்றும் வீட்டில் தனிமைப்படுத்துதல் காலம் 7 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 7 நாள் வீட்டுத்தனிமையை கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News