இந்தியா
பேருந்து - எரிவாயு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- 16 பேர் பலி
லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பாக்கூர்:
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் இன்று காலையில் பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கோவிந்த்பூர்-சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் பாதர்கோலா கிராமத்தின் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.
பேருந்தில் பயணம் செய்த 16 பேர் உயிரிழந்தனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தபோது, கடும் பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.