இந்தியா
சித்தராமையா

சாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ்வது கடினம்: சித்தராமையா

Published On 2022-01-05 03:26 GMT   |   Update On 2022-01-05 03:26 GMT
செய்யும் தொழிலையே சாதியாக மாற்றி மேல் சாதி-கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ளனர். பல்வேறு தொழில் செய்பவர்களால் தான் மனித சமூகம் வாழ முடியும்.
பெங்களூரு :

கர்நாடக சவிதா சமூகம் சார்பில் நான் சுயமரியாதைக்காரன் என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் சாதிகளை ஒழிக்க பசவண்ணர் பாடுபட்டார். சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை கண்டிக்கிறேன். நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, அவருக்கு குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் ரத்தம் மட்டுமே வேண்டும் என்று டாக்டர்கள் கேட்பது இல்லை. அப்போதைய சூழ்நிலையில் நோயாளி உயிர் பிழைத்தால் போதும் என்று தான் கூறுகிறோம்.

எந்த சாதியை சேர்ந்தவர் ரத்தம் கொடுத்தார் என்று நாம் கேட்பது இல்லை. உயிர் பிழைத்த பிறகு நாம் சாதி பற்றி பேசுகிறோம். சாதிகள் இருக்கும் வரை நாம் மனிதராக வாழ்வது கடினம். செய்யும் தொழிலையே சாதியாக மாற்றி மேல் சாதி-கீழ் சாதி என்று பிரித்து வைத்துள்ளனர். பல்வேறு தொழில் செய்பவர்களால் தான் மனித சமூகம் வாழ முடியும்.

பசவண்ணர் கூறியது போல் எந்த சாதியும் மேலானதும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை. மூடநம்பிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூடநம்பிக்கைகளை விதைப்பவர்களை புறக்கணிக்காவிட்டால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அனைவருக்கும் நல்ல கல்வி கிடைக்க வேண்டும்.

கர்நாடகத்தில் 78 சதவீதம் பேர் கல்வி அறிவு பெற்றவர்களாக உள்ளனர். ஆனால் சாதிகள் குறையவில்லை. படித்தவர்களால் தான் அதிக ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. சுயமரியாதை உள்ளவர்களாக வாழ வேண்டும், படித்து மருத்துவர், பொறியாளர்களாக தொழில் செய்ய வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Tags:    

Similar News