இந்தியா
இரண்டாவது நாளில் 37.5 லட்சம் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
தடுப்பூசி இயக்கம் தொடங்கியது முதல் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 147.62 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.
புதுடெல்லி:
இந்தியாவில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வயதினருக்கு கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று 40 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இரண்டாம் நாளான இன்று இரவு 7 மணி நிலவரப்படி 37,51,524 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. இதன்மூலம் சிறார்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் 81,45,038 ஆக அதிகரித்தது.
தடுப்பூசி இயக்கம் தொடங்கியது முதல் இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 147.62 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.