இந்தியா
நிர்மலா சீதாராமன்

சென்ட் வியாபாரியிடம் சிக்கிய ரூ.200 கோடி பா.ஜ.க. பணம் அல்ல- நிர்மலா சீதாராமன்

Published On 2022-01-01 03:28 GMT   |   Update On 2022-01-01 03:28 GMT
வருமான வரி சோதனைகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் ‘சென்ட்’ வியாபாரி பியூஷ் ஜெயினிடம் சிக்கிய சில நூறு கோடி பணம் சமாஜ்வாடி கட்சிக்கு உரியதா அல்லது பா.ஜ.க.வுக்கு உரியதா என்பதில் அவ்விரு கட்சிகள் இடையே குடுமிப்பிடி சண்டை நடந்து வருகிறது.

இந்த சண்டைக்கு மத்தியில் தான் நேற்றும் உ.பி.யில் ‘சென்ட்’ வியாபாரிகளை குறிவைத்து வருமான வரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில் டெல்லியில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்துக்கு பின்னர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம், “உ.பி.யில் கன்னாஜில் சென்ட் வியாபாரி பியூஷ் ஜெயினிடம் வருமான வரி சோதனையில் கைப்பற்றிய ரூ.197.49 கோடி பா.ஜ.க.வின் பணம் என்ற குற்றச்சாட்டு எதிர்க்கட்சி (சமாஜ்வாடி கட்சி) சார்பில் வந்துள்ளதே?” என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கூறியதாவது:-

வருமான வரித்துறையினர் உளவுத்தகவல்கள்பேரில் சோதனைகள் நடத்துகிறார்கள். அந்த பணம் பா.ஜ.க.வுக்கு உரியது அல்ல

இந்த வருமான வரி சோதனைகளால் அகிலேஷ் யாதவ் அதிர்ந்து போய் உள்ளார்.

இது யாருடைய பணம் என்பது உங்களுக்கு (அகிலேஷ் யாதவ்) எப்படி தெரியும்? நீங்கள் என்ன அவரது கூட்டாளியா? கூட்டாளிகளுக்குத்தான் பதுக்கி வைத்திருப்பது யார் பணம் என்பது தெரியும்.

இந்த சோதனைகள் அரசியல் நோக்கம் கொண்டவை அல்ல. சோதனை நடத்துகிற வருமான வரித்துறை அதிகாரிகள் என்ன வெறும் கைகளுடனா வருகிறார்கள்?

வருமான வரித்துறையில் பணம் கைப்பற்றப்படுவது, உளவுத்தகவல் அடிப்படையில்தான் சோதனை நடப்பதை காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News