இந்தியா
குமாரசாமி

இரவு நேர ஊரடங்கால் கொரோனாவை தடுக்க முடியாது: குமாரசாமி கருத்து

Published On 2021-12-28 03:58 GMT   |   Update On 2021-12-28 03:58 GMT
மேகதாது திட்டத்திற்காக பாதயாத்திரை நடத்த காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். இங்கு ஓட்டுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
பெங்களூரு :

கர்நாடகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகர் மாவட்டம் பிடதியில் உள்ள கேதிகானஹள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க முடியாது. வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூடப்படும். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு இந்த அரசு கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. அப்படி என்றால் கட்சிகளின் கூட்டங்களில் கொரோனா பரவாதா?. முடிவுகளை எடுக்கும்போது அரசு அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

நீர்ப்பாசனத்துறையில் தேவகவுடா குடும்பத்தினர் என்ன செய்தனர் என்பது மக்களுக்கு தெரியும். விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்துகிறவர்கள் யார் என்பது குறித்து காங்கிரசார் கூற தேவை இல்லை. தலக்காவிரியில் டி.கே.சிவக்குமார் பூஜை செய்துள்ளார். பிரதமர் மோடியை பார்த்து அவர் காப்பி அடித்துள்ளார். அவரிடம் இருந்து நான் பாடம் கற்க தேவை இல்லை.

இப்போது மேகதாது திட்டத்திற்காக பாதயாத்திரை நடத்த காங்கிரசார் முடிவு செய்துள்ளனர். டெல்லியில் போய் போராடி அந்த திட்டத்திற்கு அனுமதி பெற்று வர வேண்டியது தானே. இங்கு ஓட்டுகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் காங்கிரசார் பாதயாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் மக்களை ஏமாற்ற முடியாது. மத்திய அரசு கன்னட மொழிக்கு எதிராக செயல்படுகிறது. பல்வேறு தேர்வுகளில் கன்னடத்தை புறக்கணிக்கிறார்கள். இந்த விஷயத்தில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கன்னட மொழியை அடிக்கடி அவம திப்பது சரியல்ல.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.
Tags:    

Similar News