இந்தியா
ஒமைக்ரான் அச்சுறுத்தல்... மீண்டும் ஆன்லைன் வகுப்புக்கு பரிந்துரை
அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிய நிலையில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஓராண்டுக்கும் மேலாக ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன. கொரோனா தொற்று குறைந்தநிலையில், கடந்த சில மாதங்களாக கல்வி நிறுவனங்களில் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆனால், தற்போது பல்வேறு மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, நாடு முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், நாட்டில் தற்போது நிலவி வரும் ஒமைக்ரான் சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்துவது போன்ற திட்டங்கள் குறித்து தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.