இந்தியா
12 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததற்கு இதுதான் காரணம் -மல்லிகார்ஜுன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு
எந்த விவாதமும் இன்றி உடனடியாக மசோதாக்களை நிறைவேற்றுவதையே பாஜகவினர் நோக்கமாக கொண்டிருந்ததாக மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டினார்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அநாகரிகமாக நடந்துகொண்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.பி.க்கள் குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும், சஸ்பெண்ட் நடவடிக்கையை திரும்ப பெற்று எம்.பி.க்களை அவையில் அனுமதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. எனினும், சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்ப பெறப்படவில்லை.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று நிறைவடைந்ததையடுத்து, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
12 எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையுடன் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. மழைக்கால கூட்டத்தொடரில் நடந்த சம்பவம் தொடர்பாக குளிர்கால கூட்டத்தொடரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முடிவு முற்றிலும் தவறானது.
இந்த கூட்டத்தொடரில் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதம் நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால் அவர்களோ (பாஜக) எந்த விவாதமும் இன்றி உடனடியாக மசோதாக்களை நிறைவேற்றுவதையே நோக்கமாக கொண்டிருந்தனர். அவையில் மெஜாரிட்டி இல்லாததால், மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த விரும்பவில்லை. அதனால், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்தார்கள். கூட்டத்தொடர் தொடங்கியதும் 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.