சித்தூர் அருகே செம்மரம் கடத்திய 18 பேர் கைது
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மர்ம நபர்கள் செம்மரங்களை கடத்தி செல்வதாக சித்தூர் எஸ்.பி. செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் புத்தூர்- ஊத்துக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் பாலம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் செம்மரங்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 14 பேர் சதாசிவ கோனார் பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த தயார் நிலையில் வைத்துள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சதாசிவ கோனார் பகுதிக்கு சென்று அங்கு இருந்த 14 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 250 செம்மரங்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களின் மதிப்பு ரூ.1.50 கோடி ஆகும்.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரேம்குமார் (25), சிவா (25), பிரகாஷ் (21), திருமலை (29), கவாஸ்கர் (30), அன்பழகன் (35), கார்த்திகேயன் (35), வெங்கடேஷ் (26), ராகுல் (19), ராஜாமணி, சதீஷ், சிவராஜ், சாய்நாத் கிருஷ்ணமூர்த்தி, சரவணன், ரவி, திருப்பதி மற்றொரு வெங்கடேஷ் என தெரியவந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.