இந்தியா
சிபிஎஸ்இ

10-ம் வகுப்பு தேர்வில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்-சி.பி.எஸ்.இ அறிவிப்பு

Published On 2021-12-13 09:49 GMT   |   Update On 2021-12-13 09:49 GMT
எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த பிரச்சினை குறித்து பேசும்போது, ‘தவறான கேள்வி கேட்டதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
புதுடெல்லி:

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டு 2 கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 12-ம் வகுப்புக்கு தற்போது தேர்வு நடந்து வருகிறது.

10-ம் வகுப்பு முதல் பருவ ஆங்கில பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு வினா மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

அந்த கேள்வித்தாளில், பெண்களுக்கு சம உரிமை வழங்கியதால், குழந்தைகளின் ஒழுக்கம் கெட்டு விட்டது, குழந்தைகள் மீது உள்ள பெற்றோர்களின் கட்டுப்பாடுகள் முற்றிலும் அழிந்து விட்டது. மனைவிக்கு அதிகாரம் அதிகம் கொடுத்துள்ளதால் பிள்ளைகளின் ஒழுக்கம் பாதிக்கப்படுவதாக ஒரு பத்தி கொடுக்கப்பட்டு அதற்கான வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இந்த வினா கல்வித்துறையில் சர்ச்சையை எழுப்பி உள்ளது.



இதுதொடர்பாக, பாராளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி தலைவர் சோனியாகாந்தி இந்த பிரச்சினை குறித்து பேசும்போது, ‘தவறான கேள்வி கேட்டதற்கு மத்திய அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் எதிர்ப்பு கிளம்பியதால் நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்று, 10-ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.

மேலும், அந்த கேள்விக்கு பதிலளித்த மாணவர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்... அரசியலில் என்னை ஒழிக்க முயற்சி செய்தார்: குமாரசாமி மீது வீரப்பமொய்லி குற்றச்சாட்டு
Tags:    

Similar News