இந்தியா
வாரணாசியில் பிரதமர் மோடி: படகு மூலம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றார்
உத்தர பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை திறந்து வைக்கிறார்.
வாரணாசி:
பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதி பொதுமக்கள், பக்தர்கள் பயன்பாட்டிற்கு பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
இதற்காக உத்தர பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் வாரணாசி வந்தடைந்தார். பிரதமரை, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
பின்பு, வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு கற்பூரம் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அங்கிருந்து இரண்டு அடுக்கு படகு மூலம் காசிக்கு சென்ற அவர், கங்கையாற்றில் பூக்களை தூவி புனித நீராடினார்.
இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி, காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகளை திறந்து வைக்க இருக்கிறார்.
இதையும் படியுங்கள்.. மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தொண்டர்கள் மாற வேண்டும்: சரத்பவார் அறிவுரை