இந்தியா
வேந்தர் பொறுப்பை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் -பினராயி விஜயனுக்கு, ஆளுநர் அறிவுரை
பல்கலைக்கழங்களில் நீங்கள் விரும்பும் ஆட்களை நியமிக்க முடியாது என கேரள ஆளுநர் ஆரீப் முகமதுகான் உறுதிபட தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கண்ணூர் பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் கோபிநாத் ரவீந்திரன் மறுநியமனம் செய்யப்பட்டது தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, ஆளுநர் ஆரிப் முகமதுகான் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த நியமனம் தொடர்பாக என்னிடம் கேட்கப்பட்டது விதிகளின்படி இல்லை மற்றும் சட்டத்திற்கு முரணானது என்பதை நான் முழுமையாக உணர்ந்தேன். அரசுடனான சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக, நான் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளேன். ஆனால் அதன் பிறகு நான் மிகவும் சங்கடமாக உணர்கிறேன்.
பல்கலைக்கழகங்களில் அரசியல் ரீதியான நியமனங்களுக்கு என்னைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, முதலமைச்சரே வேந்தராக வர வேண்டும். அரசியல் ரீதியான காரணத்திற்காக அவருடைய ஆட்களை நான் நியமிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். என்னால் இனி அதைச் செய்ய முடியாது, அவரே வேந்தராக வர வேண்டும்.
பல்கலைக்கழகங்களின் சட்டங்களில் திருத்தம் செய்து, தனிப்பட்ட முறையில் வேந்தர் பதவியைப் பெற நான் உங்களுக்கு அறிவுறுத்துகிறேன். இதன் மூலம் அரசை சார்ந்திருக்காமல் உங்கள் அரசியல் நோக்கங்களை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
இவ்வாறு ஆளுநர் ஆரீப் முகமது கான் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.