இந்தியா
கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 9,419 பேருக்கு தொற்று

Published On 2021-12-09 04:57 GMT   |   Update On 2021-12-09 04:57 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 112 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 159 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,74,111 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:

நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,419 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,038 பேருக்கு தொற்று உறுதியானது.

கடந்த 6-ந்தேதி நிலவரப்படி, தினசரி பாதிப்பு 6,822 ஆக இருந்தது. மறுநாள் 8,439 ஆக உயர்ந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்துள்ளது. நாட்டில் மொத்த பாதிப்பு 3 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 241 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 112 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 159 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,74,111 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 97 ஆயிரத்து 388 ஆக உயர்ந்தது. இதில் நேற்று மட்டும் 8,251 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.

கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பை விட நாள்தோறும் நோயின் பிடியில் இருந்து குணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், நேற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 94,742 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்று முன்தினத்தைவிட 1,009 அதிகம் ஆகும்.



நாடு முழுவதும் நேற்று 80,86,910 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 130 கோடியே 39 லட்சத்தை கடந்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி இதுவரை 65.19 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் நேற்று 12,89,983 மாதிரிகள் அடங்கும்.


Tags:    

Similar News