இந்தியா
கைது செய்யப்பட்டவர்களை காணலாம்

சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்து போதை விருந்து- 20 பேர் அதிரடி கைது

Published On 2021-12-06 05:34 GMT   |   Update On 2021-12-06 05:34 GMT
போதை விருந்து நடத்தியவர்கள் இளைஞர்களுக்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் போதை பொருள் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு போதை பொருட்களை கடத்திய சிலரை கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவில் உள்ள உல்லாச விடுதிகளில் சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்து இளைஞர்களுக்கு போதை விருந்து நடத்தப்படுவதாக கேரள கலால் வரித்துறை அதிகாரிகளுக்கு பெங்களூருவில் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உல்லாச விடுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்காடு பகுதியில் உள்ள ஒரு தனியார் உல்லாச விடுதியில் அதிகாரிகள் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஏராளமான இளைஞர்கள் போதை விருந்தில் ஈடுபட்டிருந்தனர். அதிகாரிகளை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். ஆனால் அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் அந்த விடுதியில் போதை பொருட்கள் மற்றும் போதை எண்ணெய்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போதை விருந்தில் பங்கேற்ற 20 பேரை கைது செய்தனர். இதில் பெரும்பாலானோர் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் ஆவர். ஒருவர் கொலை வழக்கில் தொடர்புடையர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், போதை விருந்து நடத்தியவர்கள் இளைஞர்களுக்கு வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் அழைப்பு விடுத்தது தெரிய வந்தது.

மேலும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை போதை விருந்து நடத்த திட்டமிட்டு இருந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே நேரத்தில் போதை விருந்தில் பங்கேற்ற 20 பேர் கைது செய்யப்பட்டது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




Tags:    

Similar News