இந்தியா
பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் மீதான மக்கள் நம்பிக்கை அதிகரித்து வருகிறது -ஓம் பிர்லா
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பொதுக் கணக்குக் குழுக்களுக்காக பொதுவான டிஜிட்டல் தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பரிந்துரை செய்தார்.
புதுடெல்லி
பாராளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் நூற்றாண்டு கொண்டாட்டம் பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாராளுமன்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, பாராளுமன்ற குழுக்கள் வெளிப்படைத்தன்மையுடனும், நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையிலும் செயல்பட தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பொதுக் கணக்குக் குழுக்களுக்காக பொதுவான டிஜிட்டல் தளம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று மக்களவைத் தலைவர் பரிந்துரை செய்தார்.
பாராளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் மீதான மக்களின் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் காலப்போக்கில் அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட ஓம் பிர்லா, நாட்டின் கடைசி மனிதனுக்கும் அரசின் நலத்திட்டங்களின் பயன்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
நிறைவு விழாவில் மத்திய மந்திரிகள், எம்பிக்கள், மாநில சட்டமன்றங்களின் சபாநாயகர்கள், மாநில பொதுக் கணக்குக் குழுத் தலைவர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.