இந்தியா
கரையை நெருங்கும் ஜாவத் புயல்- ஒடிசா, மேற்கு வங்காளத்தில் கனமழை
வலுவிழந்த புயல் இன்று நள்ளிரவில் மேற்கு வங்காள கடற்கரையை நெருங்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புவனேஸ்வர்:
வங்கக் கடலில் உருவான ஜாவத் புயல் நேற்று மாலை வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதன் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்கியது. இன்று மாலை வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வலுவிழந்த ஜாவத் புயல், தொடர்ந்து வடக்கு-வடகிழக்கு நோக்கி ஒடிசா கடலோர பகுதிகளை கடந்து இன்று நள்ளிரவில் மேற்கு வங்காள கடற்கரையை நெருங்கும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசாவின் பூரி அருகே புயல் கரை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூரி கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளிலும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மற்றும் மாநிலத்தின் தெற்குப் பகுதிகளில் கனமழை மழை பெய்ததால், ஹூக்ளி ஆற்றில் படகு சேவைகள் நிறுத்தபப்ட்டன. கடலோர ஓய்வு விடுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு வலியுறுத்தி உள்ளது.